மட்டக்களப்பில் ஆட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து தங்கம், பணம் கொள்ளை – அதிர்ச்சி சம்பவம்

மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டி சாரதியை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட திட்டமிட்ட கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடகைக்கு முச்சக்கரவண்டியை எடுத்துச் சென்ற கொள்ளையர்கள், வழியில் சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை மயக்க நிலையில் ஆழ்த்தி, தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைபேசியை கொள்ளையடித்துள்ளனர்.
பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய சாரதி, சம்பவ நாளில் மாலை நேரத்தில் தனது பணிகளை முடித்து வீடு திரும்பும் நிலையில் இருந்துள்ளார். பின்னர் இரவு நேரத்தில் வாழைச்சேனை நோக்கி பயணிக்க வேண்டும் எனக் கூறி, ஆட்டோ தரிப்பிடத்தில் இருந்து பயணிகளை ஏற்றுள்ளார்.
இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பதற்றமடைந்து பொலிஸில் தகவல் வழங்கியுள்ளனர். மறுநாள் காலை வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட ரிதிதென்னை காட்டுப் பகுதியில் முச்சக்கரவண்டி அநாதரவாக இருப்பதை மக்கள் கண்டுள்ளனர்.
அருகில் சென்று பார்த்த போது சாரதி மயங்கிய நிலையில் வாகனத்துக்குள் இருந்துள்ளார். உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவர் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்ப விசாரணைகளின்படி, கொள்ளையர்கள் பயணத்தின் போது சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது ஒரு பவுன் தங்க மோதிரம், பணம் மற்றும் கைபேசியை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




