மீண்டும் 15% உயரப்போகும் மின் கட்டணம்: முன்வைக்கப்பட்டுள்ள புதிய கோரிக்கை

தற்போதைய மின் உற்பத்திச் செலவினங்களைக் கருத்திற்கொண்டு, இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்காக மின்சாரக் கட்டணத்தை மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அவதானம் செலுத்தியுள்ளது.

‘நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட்’ (National System Operator Pvt Ltd) நிறுவனத்தினால் இந்த வருடத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான இரண்டாம் காலாண்டிற்காக இந்த மேலதிக கட்டண உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போது மேலும் 15 சதவீத அதிகரிப்பு கோரப்பட்டுள்ளது.

 

 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத், குறித்த யோசனை தொடர்பில் ஆணைக்குழு தற்போது விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

 

 

 

மின் உற்பத்திக்காக செலவிடப்படும் உண்மையான செலவினங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள அதிகரிப்பின் அவசியம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், அடுத்த சில நாட்களில் இது குறித்த இறுதித் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

வருடத்தின் இரண்டாம் காலாண்டில் மின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையிலேயே, தேசிய அமைப்பு கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் இந்த மேலதிக கட்டண உயர்வு கோரப்பட்டுள்ளது.

ஒருவேளை இதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், ஏற்கனவே அமுல்படுத்தப்பட்ட 10 சதவீத அதிகரிப்புடன் சேர்த்து நுகர்வோர் மீதான மேலதிக சுமை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Articles

Back to top button