மின் கட்டணத் திருத்தம் பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்!!

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (பெப்ரவரி 25) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.

 

இது குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்

 

மின்சார நுகர்வோர் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர் தமது எழுத்துமூல அல்லது வாய்மூல கருத்துகளை சமர்ப்பிக்க மார்ச் 18 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

நாடு தழுவிய ரீதியில் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கி ஐந்து பிரதான இடங்களில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளன:

  • மார்ச் 07: அம்பாறை (முதலாவது அமர்வு)
  • மார்ச் 11: வவுனியா
  • மார்ச் 12: மாத்தளை
  • மார்ச் 16: அம்பாந்தோட்டை
  • மார்ச் 18: இறுதிக்கட்ட வாய்மூல ஆலோசனை அமர்வு

பொதுமக்களால் முன்வைக்கப்படும் அனைத்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் முழுமையாகப் பரிசீலித்த பின்னரே, மின் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவை ஆணைக்குழு அறிவிக்கும்.

ஒருபுறம் கட்டணத் திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், மறுபுறம் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றனர்.

 

மின்சார சபையை மறுசீரமைக்கும் செயன்முறையை அரசாங்கம் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

 

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க கருத்துத் தெரிவிக்கையில்:

“மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம். இது குறித்த இறுதி முடிவு இன்றே (25) எட்டப்படும்.”

 

இதனால் எதிர்வரும் நாட்களில் மின்சார சபையின் சேவைகளில் பாதிப்புகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

Related Articles

Back to top button