உயிர்த்த ஞாயிறு திருப்பலியில்-ஒரு தனிமனிதனின் பேராசை மனிதகுலமும் வேதனை

உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனிமனிதனின் பேராசை காரணமாக ஒட்டுமொத்த மனிதகுலமும் வேதனையை அனுபவித்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரதான திருப்பலியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வது அல்லது புனித பைபிளின் பகுதிகளை வாசிப்பது மாத்திரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைதிக்காக பிரார்த்திப்போம்

குறிப்பாக இந்தக் காலப்பகுதியில் உலக அமைதிக்காக நாம் பிரார்த்திப்போம். ஒரு மனிதனின் சுயநலத்தாலும், உலகை ஆள வேண்டும் என்ற அந்த மனிதனின் ஆசையாலும் இன்று உலக அமைதி சீர்குலைந்துள்ளது.

இதனால் மனிதகுலத்திற்கே பெரும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த மனிதனின் மனதை மாற்றவும், இந்த கடினமான மற்றும் தவறான பாதையிலிருந்து அவரை விலக்கவும் நாம் பிரார்த்திப்போம்.

 

 

கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்களால் இவ்வாறான செயல்களைச் செய்ய முடியாது. கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வதும், பைபிளை வாசிப்பதும் அல்லது பல போதகர்களை அருகில் வைத்துக்கொண்டு உலகிற்கு பிரசங்கம் செய்வதும் அல்ல.

கிறிஸ்தவம் என்பது அன்பு மற்றும் வாழ்வியல் முறையாகும். அன்பு என்பது ஒரு சேவகனாக இருப்பது, கடவுள் முன்னிலையிலும் அண்டை வீட்டார் முன்னிலையிலும் உண்மையாக இருப்பது.

 

 

ஒரு தலைவன் என்பவன் சேவகனாக இருக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்று உலகை ஆளுபவர்கள் தலைவர்களாக இருக்கிறார்களே தவிர சேவகர்களாக இல்லை. அவர்கள் அதிகாரத்தின் பின்னால் ஓடும் ஆட்சியாளர்களாகவே இருக்கிறார்கள்  என தெரிவித்தார்.

Related Articles

Back to top button