குடும்பத் தகராறு: இருவர் கொலை

காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (02) இடம்பெற்ற பயங்கரமான தாக்குதலில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
73 வயதுடைய பெண்ணொருவரும் 35 வயதுடைய ஆண் ஒருவருமே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (03) காலை 6.00 மணியளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த குடும்பத்தின் பாட்டி மற்றும் அவரது பேத்தியின் கணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் உயிரிழந்தவரின் பேத்தியின் மகளாவார்.
தாக்குதலினால் அவரது ஒரு கை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் தெலிகட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் உயிரிழந்த பெண்ணின் மற்றொரு மகளின் கணவர் எனவும், அந்த மகள் தற்போது இத்தாலியில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் உனவடுன, தலவெல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும், அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாகவே சந்தேக நபர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுத்தனர்.
மேலதிக விசாரணைகளை காலி மற்றும் தெலிகட பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.



