ஹோர்மூஸ் நீரிணையில் பரபரப்பு – வர்த்தக கப்பலை குறிவைத்து ஈரான் தாக்குதல்

ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற வர்த்தக கப்பல் மீது ஈரானிய ஆயுதப்படைகளின் உயர்மட்ட பிரிவான ஐ.ஆர்.ஜி.சி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.ஆர்.ஜி.சி விடுத்த எச்சரிக்கைகளை மீறி குறித்த கப்பல் பயணத்தை மேற்கொண்டதால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.ஜி.சியை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் வெளியாகிற அறிக்கையில், “மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைப் புறக்கணித்த ஒரு கொள்கலன் கப்பல் மீது ஈரான் இராணுவம் கடல்சார் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓமானுக்கு வடகிழக்கே 15 கடல் மைல் (28 கி.மீ) தொலைவில் உள்ள ஒரு கொள்கலன் கப்பலில் ஒரு தாக்குதல் சம்பவம் குறித்த அறிக்கை கிடைத்திருப்பதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகளை (UKMTO) கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
“ஒரு கொள்கலன் கப்பலின் உயர் அதிகாரி, தங்களது கப்பலை ஐ.ஆர்.ஜி.சி-யின் ஒரு துப்பாக்கிப் படகு நெருங்கியதாகவும், அது பின்னர் கப்பலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கப்பலின் பாலத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும்” தெரிவித்தார் என UKMTO அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கப்பலில், தீ விபத்துகளோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும், அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




