அரியாலையில் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய ரயில்; இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் – அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் நேற்றையதினம் பதிவாகிய விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சிவராஜா சிவலக்சன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



