மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில்! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கியுள்ளதாக கூறப்படும் தாக்குதல், மத்திய கிழக்கில் கடும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் முக்கிய உளவுத்துறை அலுவலகங்கள் உட்பட 30 இடங்களைத் துல்லியமாக தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வரும் பதற்றநிலையின் மத்தியில், தலைநகர் தெஹரானின் பல்வேறு பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், இஸ்ரேலில் வான்வழி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கில் குவித்து வரும் நிலையில், இஸ்ரேல் – ஈரான் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதனையடுத்து, சீனா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தங்கள் குடிமக்கள் உடனடியாக ஈரானிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன.
மேலும், ஜெர்மனி தனது நாட்டு மக்களை இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
சூழ்நிலை தீவிரமாக உள்ள நிலையில், சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.



