வவுனியா- ரயில் விபத்து – சிகிச்சை பலனின்றி சாரதியும் உயிரிழப்பு!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற  ரயில் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சாரதியும் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன், தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.

அந்தப் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை முச்சக்கரவண்டி கடக்க முயன்ற போதே இந்தக் கோர விபத்து இடம்பெற்றது.

விபத்து நிகழ்ந்த அன்றே முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

 

இந்நிலையில், இன்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன் மூலம் இந்தக் கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற  ரயில் கடவைகள் காரணமாக அடிக்கடி இவ்வாறான விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button