புத்தாண்டில் நடந்த கலவரம் – இருவர் படுகொலை

இலங்கையில் புத்தாண்டு தினமான நேற்று இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் நேற்று (14) மாலை பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சம்பவத்தில் 32 வயதுடைய வெல்லவாய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

இதேவேளை பயாகல பகுதியில் 46 வயதுடைய நபர் ஒருவர் தலையில் தடி ஒன்றினால் தாக்கிய கொலை செய்யப்பட்டுள்ளார்.

பயாகல, விகாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று புத்தாண்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபான விருந்தின் போது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இக்கொலை நடந்துள்ளது.

 

 

தாக்குதலுக்குள்ளான நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் அநுராதபுரம், நுவரவெவ குளத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button