அரசாங்கம் வழங்கிய உலர் உணவுப் பொருட்கள் திருட்டு

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட கற்பிட்டி – மண்டலக்குடா மக்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த 55 உலர் உணவுப் பொதிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து கற்பிட்டி பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவின் மண்டலகுடா கிராம அலுவலர் நேற்று அளித்த முறைப்பாட்டை அடுத்து குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மண்டலகுடா கிராம மக்களுக்கு கடந்த 25 ஆம் திகதி விநியோகிக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளில், எஞ்சிய 181 பொதிகள் கிராமத்திலுள்ள மரண விசாரணை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீட்டில் வைத்திருந்ததாக கிராம அலுவலர் பொலிஸில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபா மதிப்புள்ள 55 உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாக கிராம அலுவலர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



