குடும்பஸ்தர் வெட்டிக் கொலை! களுவாஞ்சிகுடியில் பரபரப்பு

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் இரத்தம் தோய்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது தோட்டத்தில் வேலை செய்து விட்டு குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த நபரே இவ்வாறு இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது தோட்டத்தில் உள்ள குடிசையில் உறங்கி கொண்டிருந்த நபரே இவ்வாறு பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதனை அவதானித்த உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரி.எம்.றியாஸ் தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப்குமார, பொலிஸ் தடயவில் பிரிவு, பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு, உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த இடத்திற்குச் சென்று மேலதிக விடயங்களை ஆராய்து வருகின்றனர்.
இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.





