
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதாகவும் இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு நகரக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
பலத்த மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 150 மி.மீ. அளவான மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மாலை 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதேநேரம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீரற்ற வானிலையால் நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக பதிவான மரணங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (15) காலை 6:00 மணிக்கு வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 104 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் மேலும் கூறியுள்ளது.




