சாமி சிலையின் கையில் ரத்தத்துடன் கிடந்த மனிதத் தலை திடுக்கிடும் சம்பவம்

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்று, அவரது தலையைத் துண்டித்து, அப்பகுதியில் உள்ள ரத்னாவலி தேவியின் சிலையின் கைகளில் வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஒருவரின் சகோதரர் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தற்போது விளக்கமறியலில் உள்ள ஒருவரே இந்தக் கொலையை முழுமையாக வழிநடத்தியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தகவல்கள் வௌியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தில் உயிரிழந்தவர் 34 வயதுடைய ‘பொடி’ என்ற லக்மால் சந்தருவன் என கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன் அன்றைய தினம் உயிரிழந்தவரின் பிறந்தநாள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட ‘பொடி 2025 பெப்ரவரி 2 ஆம் திகதி மாமடல பகுதியில் நடந்த முக்கொலைச் சம்பவத்தின் சந்தேக நபராவார். அவர் மார்ச் 30 ஆம் திகதி பிணையில் விடுதலையாகி வந்திருந்தார்.
மெத்த லொக்கு எனப்படும் சலித உதயங்க மல்லிகாராச்சி, சமீர உதயங்க மற்றும் சாரங்க தர்ஷன ஆகிய மூவரே இந்தக் கொலையைச் செய்துள்ளனர். இவர்களைக் கொல்லப்பட்டவரின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.




