திருகோணமலை புத்தர் சிலை வழக்கு: பிணை மனு புதனன்று பரிசீலனை!

திருகோணமலை(Trincomalee) கடற்கரையில் புத்தர் சிலை ஒன்றை வைத்து, அதையொட்டி சட்டவிரோதமான கட்டுமானத்தை அமைத்தமை தொடர்பான வழக்கில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நான்கு தேரர்கள் உட்பட 10 எதிராளிகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளோருக்கு பிணை அனுமதி கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுச் செய்த எதிராளிகள், அங்கு மனு நிராகரிக்கப்பட்டமையை அடுத்து, இப்போது திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவை நாளைமறுதினம் 11ஆம் திகதி புதன்கிழமை பரிசீலனைக்கு எடுக்க மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

இதன் காரணமாக இந்த விவகாரம் தொடர்பான வழக்கை திருகோணமலை நீதிவான் நீதிமன்றமும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

 

மேல் நீதிமன்றத்தில் எதிராளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆயினும் வழக்காளி உட்பட ஏனைய தரப்பினர்களை அழைத்து அவர்களின் கருத்தையும் செவிமடுத்த பின்னர் பிணை குறித்து முடிவெடுப்பதற்காக வழக்கை நாளைமறுதினம் புதன்கிழமைக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா ஒத்திவைத்தார்.

 

 

முன்னதாக இன்று காலை இந்த வழக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கின் எதிராளிகள் திருகோணமலை மேல் நீதிமன்றத்தை நாடி இருக்கின்றமை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மேல்நீதிமன்ற வழக்கின் வழிகாட்டலை கவனித்து நடவடிக்கை எடுப்பதற்காக திருகோணமலை நீதிவான் நீதிமன்றமும் தனது வழக்கை இன்று மதியத்துக்கு ஒத்திவைத்தது.

பின்னர் மதியம் அளவில் இந்த வழக்கு நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட சமயம், மேல் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பிணை மனு விவகாரத்தை நாளைமறுதினம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருப்பதாக மன்றுக்குத் தெரிவிக்கப்பட்டது.

திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி இந்த விடயத்தில் வழங்கும் உத்தரவுக்கு அமைய வழிகாட்டல் நடவடிக்கைகளை எடுப்பதற்காக வழக்கை அதே 11 ஆம் திகதிக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றமும் ஒத்திவைத்தது.

வழக்கு முடிந்து நீதிமன்றத்திலிருந்து பிக்குமார் உட்பட எதிராளிகள் விளக்கமறியல்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில், நீதிமன்றத்துக்கு முன்பாகக் கூடியிருந்த பிக்குமார் சிலரும், பொதுமக்களும் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

Related Articles

Back to top button