உள்நாடு

தலைக்கவசம் இன்றி ஆபத்தான முறையில் பைக் பயணம் – சிக்கிய யுவதிகள்

Desktop Image Mobile Image

மோட்டார் சைக்கிள் ஒன்றில் தலைக்கவசம் இன்றி, ஆபத்தான முறையில் மூன்று யுவதிகள் பயணிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, நான்கு பெண்களை புத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீதியில் மூன்று இளம் பெண்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த காணொளி பொதுமக்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

வைரலான காணொளி காட்சிகளைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பெண், அதில் பயணித்த இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கொலம்பகே ஆர, ஹிதிகிவுல மற்றும் உனவட்டுன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

 

 

மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 23 வயதுடைய யுவதியிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் மீது செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, மோட்டார் சைக்கிளில் ஒருவருக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றமை,  தலைக்கவசம் இன்றிப் பயணித்தமை, பொது வீதியில் ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சட்ட நடவடிக்கை

சாரதி அனுமதி பத்திரம் இல்லாத ஒருவருக்குத் தனது மோட்டார் சைக்கிளை வழங்கியமைக்காக அதன் உரிமையாளருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதியும் உரிமையாளரும் இன்று (11) திங்கட்கிழமை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Back to top button