நள்ளிரவு கொடூரம் கனடாவில் – இலங்கை இளைஞன் கொலை சம்பவம்

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்திலுள்ள ஏஜாக்ஸ் (Ajax) நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் அவரது இல்லத்திலேயே வைத்து மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா என அந்நாட்டுப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:40 மணியளவில், ஏஜாக்ஸ் நகரின் Taunton மற்றும் Westney வீதிகளுக்கு அருகிலுள்ள வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வீட்டிற்குள் இளைஞர் ஒருவர் மிகக் கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டனர். அவருக்குத் தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி நிக்கோலஸ் கிளக்ஸ்டைன், “இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல; குறிப்பிட்ட அந்த நபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதல்” எனத் தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எது என்பது குறித்த விபரங்களை பொலிஸார் இதுவரை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, அங்கிருந்து இருவர் தப்பியோடியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவர்களது அடையாளங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




