வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்; அவசரநிலை பிரகடனம்

லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இரண்டு நிலநடுக்கங்கள் வெறும் 39 விநாடிகள் இடைவெளியில் ஏற்பட்டுள்ளன. இந்த இரட்டை அதிர்வுகள் நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டதுடன், பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
தலைநகர் கராகஸில் குடியிருப்பு மற்றும் வர்த்தகக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கரீபியன் கடற்பகுதிக்கான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. மேலும், பல பிந்தைய நிலஅதிர்வுகளும் பதிவாகியுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த பேரிடரால் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நாட்டின் முக்கிய நுழைவாயிலான சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் சேதமடைந்ததன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அவசரநிலை நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தலைமையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.




