
நுவரெலியா மாவட்டத்தின் தவலந்தன்னை பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூண்டுலோயா பொலிஸார் தெரிவிப்பதன்படி, இந்த விபத்து நேற்று முன்தினம் (04) மாலை சுமார் 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தவலந்தன்னை பகுதியில் இருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்த பார ஊர்தி ஒன்றும், எதிர்திசையில் பூண்டுலோயாவிலிருந்து தவலந்தன்னை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் கேந்திர விகாரை அருகிலுள்ள சாலையில் நேருக்கு நேர் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோதலின் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் அவர் அவசர சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பார ஊர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்திற்கான காரணங்கள் குறித்து பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




