ரூபி பிரின்சஸ் சொகுசு கப்பலில் நோரோ வைரஸ் பரவல்; 125 பேர் பாதிப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து ஆயிரக்கணக்கான பயணிகளுடன் கரீபியன் தீவுகளை நோக்கிப் பயணித்த “ரூபி பிரின்சஸ்” சொகுசு கப்பலில் நோரோ வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், மொத்தம் 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
20 நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்த இந்த கப்பலில் பயணித்த 102 பயணிகளும், 23 பணியாளர்களும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், இந்த பாதிப்பு உணவு நச்சுத்தன்மையால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. எனினும், குறுகிய நேரத்திலேயே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட பரிசோதனைகளில், இது வேகமாக பரவக்கூடிய நோரோ வைரஸ் தொற்று என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், குறித்த சொகுசு கப்பல் தற்போது சான் பிரான்சிஸ்கோவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கப்பலின் அனைத்து பகுதிகளிலும் முழுமையான கிருமி நீக்கப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
