இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவு பகுதியில் இன்று (16) காலை 6.7 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு தகவல்களின்படி, பாலு நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42 கிலோமீற்றர் தொலைவில், பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், தற்போது வரை உயிர்சேதம் அல்லது பாரிய பொருட்சேதம் தொடர்பான எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசிய புவி இயற்பியல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நிலநடுக்கத்தின் தாக்கம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமைகள் குறித்து மதிப்பீடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நில அதிர்வு அதிகம் பதிவாகும் நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள “Ring of Fire” எனப்படும் புவியியல் வளையப் பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.




