
கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறி ஒன்று இன்று (03) அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலுகல சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று காலை சுமார் 5.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி மற்றும் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் கித்துல்கல பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விபத்தில் சம்பந்தப்பட்ட லொறி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




